சுதந்திர கட்சி தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் திடீர் இராஜினாமா! மீண்டும் இடத்தை கைப்பற்றுவாரா ஹிஸ்புல்லாஹ்?



ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் என தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சாலிந்த திசாநாயக்கவின், மறைவின் பின்னர் பட்டியலில் அடுத்துவரும் உறுப்பினராக சாந்த பண்டார திகழ்கின்றார்.


நாடாளுமன்ற உறுப்பினர் சாலிந்த திசாநாயக்கவின் மறைவினால் ஏற்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்தை நிரப்பும் நோக்கில் அவர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பில் தென்னிலங்கை ஊடகம் ஒன்றிற்கு சாந்த பண்டார வழங்கிய செவ்வியில் தெரிவித்திருப்பதாவது,


ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினால் விடுக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரமே தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.


அத்துடன் குருநாகல் மாவட்டத்திலிருந்து நேரடி மக்கள் பிரதிநிதியாக தாம், மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் சாலிந்த திசாநாயக்கவின் வெற்றிடத்திற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்படவிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.தெரிவித்தள்ளார்.







ஏற்கனவே தேசிய பட்டியல் உறுப்பினராகவிருந்த எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டதை அடுத்து, ஏற்பட்ட வெற்றிடத்திற்கே சாந்த பண்டார நியமிக்கப்பட்டிருந்தார்.


இதேவேளை, சாந்த பண்டாரவின் பதவி விலகலால் வெற்றிடம் ஏற்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசிய பட்டியல் உறுப்பினர் பதவிக்கு, கண்டி அல்லது மொனராகலை மாவட்டத்திலிருந்து எவரேனும் ஒருவரை ஜனாதிபதி நியமிக்கும் சாத்தியம் உள்ளதாக சாந்த பண்டார தெரிவித்தார்.


ஏப்ரல் 21 தாக்குதல்களை அடுத்து, நாட்டில் ஏற்பட்டிருந்த பாதுகாப்பு சூழ்நிலை மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகள் மீதான குற்றச்சாட்டுகளை அடுத்து, அதுதொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு இடமளிக்கும் வகையில் ஆளுநர்களான ஹிஸ்புல்லா, அசாத் சாலி மற்றும் முஸ்லிம் அமைச்சர்கள் ஆகியோர் தங்களின் பதவிகளை இராஜினாமா செய்திருந்தனர்.


இந்த சூழ்நிலையில், தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருக்கான வெற்றிடத்திற்கு மீண்டும் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா நியமிக்கப்படுவாரா என்பது தொடர்பான தகவல்கள் உறுதியாக வெளியாகவில்லை எனவும் தென்னிலங்கை ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


Powered by Blogger.