மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூகம் மேம்பாட்டு மையத்தின் உறுப்பினர்களுக்கு இலவச மருத்துவ முகாம்!!
மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூகம் மேம்பாட்டு மையத்தின் உறுப்பினர்களுக்கான இலவச மருத்துவ முகாம் இன்று (21) மட்டக்களப்பில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் வேண்டுகோளுக்கு அமைய முதற்கட்டமாக 100 சமாதான நீதவான்களுக்கான இலவச மருத்துவ முகாம் இன்று மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஆர். முரளீஸ்வரன் அவர்களது வழிகாட்டலுக்கு அமைய பிராந்திய சுகாதாரப் பணிமனையின் சதுர்முகம் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற குறித்து மருத்துவ முகாமானது மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூகம் மேம்பாட்டு மையத்தின் தலைவரும் சிரேஸ்ட ஊடகவியலாளரும் அகில இலங்கை சமாதான நீதவானுமாகிய "சாமஸ்ரீ தேசமானிய" உ.உதயகாந்த் தலைமையில் இடம்பெற்ற மருத்துவ முகாமில் பிராந்திய சுகாதார பணிமனையின் வைத்தியர்கள் தாதியர்கள், பயிற்சித்தாதியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணிமனையின் உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட சமாதான நீதவான்கள் சமூகம் மேம்பாட்டு மையத்தின் நிர்வாக சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது 100 சமாதான நீதவான்களுக்கு இலவசமாக மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், நீதி அமைச்சினால் கோரப்பட்டுள்ள சமாதான நீதிவான்களின் உயிர்வாழ் சான்றிதழ் பெற்றுக் கொள்வதற்கான மருத்துவச் சான்றிதழ் இதன் போது இலவசமாக வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
















