கிழக்குப் பல்கலைக் கழகத்தினுடைய கலை கலாசாரா பீடத்தின் எட்டாவது வருடாந்த ஆய்வு மாநாடு!!

மட்டு - துஷாரா

இலங்கை கிழக்குப்பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடம் நடத்தும் எட்டாவது வருடாந்த ஆய்வு மாநாடு எதிர்வரும் 18.08.2026 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை வந்தாறுமூலையிலுள்ள பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.

கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கணேஸ் சுரேஸ் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த ஆய்வு மாநாட்டின் பிரதம அதிதியாக கிழக்குப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் ப.பிரதீபன் அவர்கள் பங்குகொள்ளவிருக்கின்றார். 

இந்த ஆய்வுமாநாட்டின் சிறப்பு உரையினை தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெகான் பெரேரா அவர்கள் வழங்கவுள்ளார்.

மாநாட்டின் ஆரம்ப வைபவம் நல்லையா மண்டபத்தில் மு.ப 09:00 - 11:00 வரை நடைபெறும், இதனையடுத்து கலை கலாசார பீடத்தின் ஆங்கில மொழிக் கற்கைகள் துறையில் மு.ப 11:00 – பி.ப 01:00, பி.ப 02:00 – பி.ப 03:30 வரை என இரு அமர்வுகளாக ஆய்வாளர்களின் ஆய்வுக் கட்டுரைகளின் முன்வைப்புகள் நடைபெறவுள்ளன.

'புவியியலும் சூழலியலும்', 'சமூகவியலும் மானுடவியலும்', 'பன்மைத்துவச் சமூகங்களின் அடையாளங்களும் சமூக நல்லிணக்கமும் இலக்கியமும் சமூகமும்', 'கல்வியும் கற்றல் கற்பித்தல் செயல்முறைகளும்', 'அரசியலும் மனித உரிமைகளும்', 'கலையாற்றுகைகளும் அதன் கட்டுருவாக்கங்களும்', 'சமயங்களும் அறமும்', 'வரலாறும் வாய்மொழி மரபுகளும், 'உளநலமும் பெண்கள் கற்கையும்' என்ற பத்துத் தலைப்புகளின் கீழ் மொத்தம் 62 ஆய்வுக் கட்டுரைகள் இம்மாநாட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

இதனையடுத்து பி.ப 04:00 மணியளவில் எட்டாவது ஆய்வு மாநாட்டின் நிறைவு விழா நல்லையா மண்டபத்தில் நடைபெறும் இதில் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்த ஆய்வாளர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்படும்.

இந்த எட்டாவது ஆய்வு மாநாட்டின் இணைப்பாளராக கலைகலாசார பீடத்தைச் சேர்ந்த பேராசிரியர் ந.புஸ்பராசா அவர்கள் செயலாற்றி வருகின்றார்.




Powered by Blogger.