பாலியல் துஷ்பிரயோகத்தால் தன் உயிரை மாய்த்த மாணவி டில்லி ஹம்சிகாவிற்காக நீதி வேண்டி மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நீதிவேண்டியும் இனியும் இவ்வாறான துஷ்பிரயோகம் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்யக் கோரியும் பாடசாலைகளில் உளவியல் கட்டமைப்பை வலிமைப்படுத்தும் முகமாக நீதி கோரி 11.05.2025 இன்று காந்தி பூங்காவளாகத்தின் முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
"என் மௌனம் என் குற்றமல்ல - உன் செயல்தான் குற்றம் மௌனத்தை காப்போம்" என பாலியல் துஷ்பிரயோகத்தால் தன்னுயிரை மாய்த்த டில்லி ஹம்சிகாவுக்காக வேண்டி ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு, குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது
வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், மாணவர்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும், தண்டனை இல்லை, என்பதே குற்றவாளியின் தைரியம், பரிதாபம் வேண்டாம் பாதுகாப்பு வேண்டும் போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷம் எழுப்பி ஒரு மணி நேர கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.
மட்டக்களப்பு, அம்பாரை மற்றும் திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் அமைப்புகள் குறித்த ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்திருந்ததுடன், இதில் பெண்ணியம் சார்ந்த சமூக செயற்பாட்டாளர்கள், சமூக அமைப்புக்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.