கிழக்குப்பல்கலைக்கழகத்தின் 26வது பொதுப்பட்டமளிப்பு விழாவும் பல்கலைக்கழக வாரமும்!


கிழக்குப் பல்கலைக் கழகத்தின் 2022 ஆம் ஆண்டிற்கான 26 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா மற்றும் 42வது வருட நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக வாரம் குறித்து தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு 27.09.2023 திகதி கிழக்குப்பல்கலைக்கழக மாநாட்டு மண்டபத்தில்  கிழக்குப்பல்கலைக்கழக  உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம்  தலைமையில் நடைப்பெற்றது. 

கிழக்குப்பல்கலைக்கழகத்தின் 2022ம் ஆண்டுக்கான 26வது பொதுப்பட்டமளிப்பு விழா எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ம் மற்றும் 8ம் திகதிகளில் கிழக்குப்பல்கலைக்கழக வேந்தர்  ஓய்வு பெற்ற பேராசிரியர் மா.செல்வராஜா அவர்களின் தலைமையில் நல்லையா ஞாபகார்த்த மண்டபத்தில் நடத்தப்படவுள்ளது.

மூன்று அமர்வுகளாக இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள இப் பொதுப்பட்டமளிப்பு விழாவில் 1649 உள்வாரி மாணவர்களும், 55  பட்டபின்படிப்பு மாணவர்களும், 56 வெளிவாரி மாணவர்களும் அடங்கலாக 1760 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

மேலும் இலங்கை, மாலைத்தீவு மற்றும் தென் ஆசியாவிற்கு உரித்தான உலகவங்கியின் முன்னனி பொருளியலாளரும் மனித அபிவிருத்திக்கான தலைவருமான மதிப்பிற்குறிய பேராசிரியர் கர்ஷ அத்துருபான (Professor Harsha Aturupane ), இலங்கைக்கான குவைத் நாட்டின் தூதுவர் கலாப் எம்.எம்.பூ தாய்ர் ( Mr.Khalaf.M.M. Bu Dhhair ) மற்றும் பொதுநலவாய கல்விக்கான பிரதம நிறைவேற்று தலைவரான பேராசிரியர் ஆஸா எஸ்.கன்வார் (Professor Asha S.Kanwar) ஆகியோர் இந் நிகழ்வுகளில் பிரதம விருந்தினர்களாக கலந்து சிறப்பிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதுமட்டுமின்றி கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 42 வது  வருட பூர்த்தியை முன்னிட்டு ஒக்டோபர் மாதம் 1ம் திகதி தொடக்கம் 8ம்  திகதி 2023 வரையான காலப்பகுதியில் பல்வேறு நிகழ்வுடன் கூடிய பல்கலைக்கழக வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

இது குறித்து கருத்து தெரிவித்த  கிழக்குப்பல்கலைக்கழ உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் அவர்கள் கிழக்கு பல்கலைக்கழக சமூகத்தினருக்கான திறந்த நாள் கிழக்கு பல்கலைக்கழகம் அதனுடைய 42 வது பல்கலைக்கழக தினத்தையொட்டி ஒக்டோபர் மாதம் 1ம்  திகதி தொடக்கம் 8ம் திகதி 2023 வரையான காலப்பகுதியில் பல்கலைக்கழக வாரம் என்பது பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்வினை விசேடமான முறையில் கொண்டாடுவதற்காக பல்கலைக்கழக சமூகம் ஒக்டோபர் 3ம் திகதியினை திறந்த நாளாக நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

கிழக்கு பல்கலைக்கழக வரலாற்றில் இதுவே முதல் தடவையாக இப் பிராந்தியத்தில் உள்ள சமூகத்தினருக்காக பிரகடனபடுத்தப்பட்ட ஓர் திறந்த நாள் என கூறலாம். பல்கலைக்கழகம் பிராந்திய அபிவிருத்திக்கான ஓர் இயந்திரமாகவும், மத்தியநிலையமாகவும் கடமை புரிகின்றதொன்றாகும். 2023 ம் ஆண்டில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள  இந்த திறந்த நாள் பொதுமக்கள் எமது பல்கலைக்கழகதிற்கு வருகைதருவதற்கான ஓர் சந்தர்பத்தினை வழங்குகின்றது, என்பதுடன் எமது கல்விசார் உத்தியோகத்தர்கள் மற்றும் தற்போது கல்வி பயிலும் மாணவர்களுடன் கலந்துரையாடி கிழக்கு பல்கலைக்கழகத்தில் தற்போது கிடைக்கக்கூடியதாக இருக்கின்ற கல்வி நிகழ்ச்சி திட்டங்களையும் அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும் இவ் விசேட நிகழ்விற்காக நாம் அன்புடன் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், சிறு முயற்சியாண்மை சமூகத்தினர், விவசாய சமூகத்தினர், மீன்பிடி சமூகத்தினர்,  சிறு கைத்தொழில் உற்பத்தியாளர்கள் மற்றும் பொதுமக்கள் போன்ற அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம் என கேட்டுக்கொண்டார்.
Powered by Blogger.