கிழக்கில் குறைந்து வரும் தமிழர்களின் விகிதாசாரம்; வரட்டு கௌரவம் பார்த்தால் அடிமைத்துவமே நிலையாகும்.









கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இன விகிதாசாரம் குறைந்து கொண்டே செல்கின்றது. அரசியல் கொள்கை பாரம்பரியம் பேசிக் கொண்டு காலத்தினை இழுத்தடித்தால் கிழக்கில் தமிழர் மாற்று சமுகங்களிடம் அரசியல் அடிமையாகும் நிலை தோன்றிவிடும் என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார். 










தமிழர்களின் 30 வருட ஆயுத போராட்டம் 30 வருட அரசியல் போராட்டங்களின் விழைவாக கிடைத்த ஆகக்குறைந்த நிர்வாக மாகாணசபை முறைமையினையும் கிழக்கு தமிழர்கள் அனுபவிக்க முடியாது வேடிக்கை பார்க்கும் நிலையினை மாற்றி 2008-2012 வரை எமது கட்சியின் தலைவர் சிவ.சந்திரகாந்தன் கிழக்கு மாகாண முதலமைச்சராக பொறுப்பேற்று தமிழரின் இருப்பை நிலைநாட்டினார். அத்துடன் இன,மத,மொழி பேதமின்றி சமத்துவமான ஆட்சியும் நடாத்திக்காட்டினார். ஆனால் 2012 இன் பின்னர் 2015 இன் பின்னர் என என்ன நடந்தது என அனைவருக்கும் தெரியும். தமிழர்களிடம் நில,நிருவாக,நிதி ரீதியாக எப்படி நசுக்கப்படுகின்றனர் என்றும் தெரியும். யார் சரி, யார் பிழை என்று பார்ப்பதற்கான நேரமல்ல இது. எது சரி, எது தவறு என்றே பார்க்க வேண்டும் ஒவ்வொரு அரசியல் கருத்துக்கள் கொள்கைகள் இருக்கும் இது கொள்கைகளைப் பற்றி பேசி கிழக்கு தமிழரின் இருப்பை இல்லாமல் செய்யும் செயற்பாட்டில் யார் ஈடுபட்டாலும் அதனை அனுமதிக்க முடியாது. 2018 உள்@ராட்சி சபைத் தேர்தல் முடிந்த பின்னர் கொள்கை பேசியதன் விழைவு கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் அன்றைய கட்சிகளை இணைக்கும் முயற்சி தோல்வியடைந்ததன் விழைவு செங்கலடி பிரதேச சபையின் செயற்பாடுகள் மூலம் தமிழர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.





1881ம் ஆண்டு கிழக்கில் 58.96 வீதமாக இருந்த தமிழர்கள் 1981ம் ஆண்டு 42.06 வீதமாகவும் 2012ம் ஆண்டு 39.79வீதமாக குறைவடைந்து கொண்டு செல்கின்றது. கிழக்கு மாகாணத்தில் 617295 தமிழர்கள் 569738 முஸ்லீம்கள் 359136 சிங்களவருமாக இன ரீதியான சனத்தொகையுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். 49456 மேலதிக சனத்தொகையுடனேயே தமிழர்கள் கிழக்கில் 1ம் இடத்திலுள்ளனர். இந் நிலை இன்னும் 5 வருடத்திலேயோ அல்லது 10 வருடத்திலேயோ மாற்றமடையலாம். 





எனவே அரசியல் கட்சிகள் வடக்குடன் ஒப்பிட்டோ அல்லது ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிட்டோ போவதை ஒத்திவைத்து கிழக்கு மாகாண மக்களின் எதிர்காலம் குறித்து திறந்த மனதுடன் இதயங்களை பேசவைக்க வேண்டும். வாய் வார்த்தையால் பேசிவிட்டுச் செல்லக்கூடாது. கிழக்கு மாகாணத்தின் தமிழர்களின் இருப்பிற்காக வலுவான எதிர்காலத்திற்காக எவ்விதமான ஏற்றுக் கொள்ளக்கூடிய விட்டுக் கொடுப்புகளுடனும் பேசுவதற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தயாராக உள்ளது எனவும் குறிப்பிட்டார்


Powered by Blogger.