கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திற்கு மார்க்கண்டு நேசராசா குடும்பத்தின் அனுசரனையில் மூன்று கோடி பெறுமதியான சித்திரத் தேரிற்கான ஆரம்ப நிகழ்வு!!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை அருள்மிகு ஸ்ரீ தான்தோன்றீஸ்வர் ஆலயத்திற்கு அமையவிருக்கும் புதிய அலங்கார சித்திர தேரிற்க்கான ஆரம்ப நிகழ்வு இன்று (23.08.2026) திகதி இடம்பெற்றது.

கொக்கட்டிச்சோலை அருள்மிகு ஸ்ரீ தான்தோன்றீஸ்வர் ஆலயத்தின் தலைவர் வண்ணக்கர் இ.மேகராசா அவர்களது தலைமையில் இடம் பெற்ற ஆரம்ப நிகழ்வானது ஆலயத்தின் தலைமை குருக்கள் சிவஸ்ரீ  மு.கு.சச்சுதானந்த குருக்கள் தலைமையில் விசேட பூசையுடன் ஆரம்பமாகியது.

அமையப்பெறவுள்ள சித்திர தேருக்கான ஆரம்ப நிகழ்வாக தேருக்கான அடிச்சட்டத்திற்கு விசேட அபிசேகம் செய்யப்பட்டு பூசை வழிபாடுகள் இடம் பெற்றதனைத் தொடர்ந்து தேரிற்கான அனுசரனையாளர்களான கோயில் போரதீவைச் சேர்ந்த லண்டனில் வசிக்கும் மார்க்கண்டு நேசராசா குடும்பத்தினரினால் ஆலய அறங்காவலர்களிடம் தேரின் அடிச்சட்டம் வழங்கப்பட்டதனைத் தொடர்ந்து தேரினை வடிவமைக்கவுள்ள சிப்பாற்சாரி சந்திரமோகன் அவர்கள் உள்ளிட்ட சிற்பாச்சாரியார் குழுவினர் தேரிற்கான ஆரம்ப வேலையினை சுப வேளையில் ஆரம்பித்து வைத்தனர்.

குறித்த பூசை நிகழ்வுகளில் மார்க்கண்டு நேசராசா குடும்பத்தின் உறுப்பினர்கள், பிரபல தொழிலதிபரும் தேசியஜோதி Dr.பீ.நல்லரெத்தினம்,  வெல்லாவெளி பிரதேச செயலாளர், பட்டிப்பளை பிரதேச சபை தவிசாளர், செயலாளர் வண்ணக்கர் சி.கங்காதரன், பொருளாளர் வண்ணக்கர் ச.கோகுலகிருஷ்ணன்,  ஆலய அறங்காவலர் சபை உறுப்பினர்கள், பொது மக்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டு கொக்கட்டிச்சோலை அருள்மிகு ஸ்ரீ தான்தோன்றீஸ்வரப் பெருமானின் அருள்கடாற்சத்தினை பெற்றிருந்தனர்.

ஈழ மணித்திருநாடு என்று அழைக்கப்படும் இலங்கை தேசத்தின் கிழக்கிழங்கையின் தேரோடும் ஆலயம் என்று வர்ணிக்கப்படும் கொக்கட்டிச்சோலை அருள்மிகு ஸ்ரீ தான்தோன்றீஸ்வர் ஆலயத்தின் சித்திரத் தேர் சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக காணப்படுவதனால் குறித்த சித்திரத் தேரிற்கு பதிலான புதிய தேரினை சுமார்  மூன்று கோடி ரூபாய் செலவில் மட்டக்களப்பு கோயில் போரதீவைச் சேர்ந்த லண்டனில் வசிக்கும் மார்க்கண்டு நேசராசா குடும்பத்தினர் முழு அனுசரனையினை வழங்கியுள்ளனர்.

அதே வேளை கொக்கட்டிச்சோலை அருள்மிகு ஸ்ரீ தான்தோன்றீஸ்வர் ஆலயத்தினை பூரண கருங்கல்லிலாலான ஆலயமாக மாற்றியமைக்கும் பணிகள் மிக மும்முரமாக தற்போது இடம் பெற்றுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.



















Powered by Blogger.