கறுப்பு ஜனவரி - மட்டக்களப்பில் ஊடகவியலாளர்கள் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்!

(அலெக்ஸ்)

மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களை  நினைவு கூறும் கறுப்பு ஜனவரியையிட்டு செவ்வாய்க்கிழமை ( 27)இன்று மட்டு காந்தி பூங்காவில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபி  முன்பாக ஊடகவியலாளர்கள் தீப்பந்தம் ஏந்தி  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டு.ஊடக அமையம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் ஆகியன இணைந்து இன்று மாலை 5.00 மணிக்கு மட்டக்களப்பு காந்தி பூங்காவில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவு தூபியில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றி 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.

இதன்போது கடத்தப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டும், ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்து, ஊடக அடக்கு முறையை நிறுத்து, ஊடகவியலாளர்கள் மீது கட்டவிழ்த்தவிடப்படும் அச்சுறுத்தல்களை நிறுத்து போன்ற கோசங்களை எழுப்பியவாறு தலையில் கறுப்புப் பட்டி அணிந்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இப்போராட்டத்தில்  மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன், கிழக்கு தமிழ் ஊடக இல்லத்தின் செயலாளரும் அகில இலங்கை சமாதான நீதிவானுமாகிய உ.உதயகாந்த் உள்ளிட்ட சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் சுமார் ஒருமணித்தியாலம்  போராட்டத்தில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.













Powered by Blogger.