மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் இருந்து வாக்கெடுப்பு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன!!

உள்ளூராட்சி மன்ற தேர்தல் 2025 இற்கான வாக்குப் பெட்டிகள் வாக்கெடுப்பு நிலையங்களுக்கு இன்று எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள்  இன்று (05) திகதி தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் பிரதான மத்திய நிலையமாகிய மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் இருந்து வாக்கெடுப்பு நிலையங்களுக்கு சிரேஸ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தர்களினால் எடுத்துச் செல்லப்பட்டன.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் நாளை இடம்பெறவிருக்கின்ற நிலையில் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 447 வாக்கெடுப்பு நிலையங்களுக்குமான வாக்குப் பெட்டிகளே எடுத்துச் செல்லப்பட்டன.

இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்கு 455,520 பேர் தகுதிபெற்றுள்ளதுடன் அவர்கள் வாக்களிப்பதற்காக 447 வாக்களிப்பு நிலையங்கள் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த வாக்களிப்பு நிலையங்களில் நாளை காலை 07.00 மணி தொடக்கம் மாலை 04.00 மணி வரையில் வாக்கெடுப்பு இடம் பெறவுள்ளது. 

வாக்கு எண்ணும் பணிகள் நாளை (06) திகதி 4.30 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், வாக்கெண்ணுவதற்காக 144 வாக்கெண்ணும் நிலையங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயதப்படுத்தப்பட்டுள்ளன.

இதுவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 353 தேர்தல் விதிமீறல்கள் முறையிடப்பட்டுள்ளதுடன், எந்தவொரு வன்செயலும் இதுவரையில் அறிக்கையிடப்படவில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் கடமைகளுக்காக சுமார் 6000 அரச ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.











Powered by Blogger.