மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கு சிமாட் ஸ்ரீ லங்கா நிறுவனத்தினால் நடாத்தப்படும் இலவச கணனி பயிற்சி நெறி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளிதரனினால் இன்று (01) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவனின் வழிகாட்டல் மற்றும் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் இங்கு உரையாற்றுகையில் அரச உத்தியோகத்தர்கள் தமது கடமைப்பட்டியலுக்கு அப்பால் மாவட்ட நலன் கருதி ஏற்பாடு செய்துள்ள இச்செயற்பாட்டிற்கு பாராட்டுத் தெரிவித்ததுடன், பயிற்சியாளர்கள் பெறுமதிமிக்க இப்பயிற்சியினை வெற்றிகரமாக நிறைவு செய்யவேண்டுமென கேட்டுக் கொண்டதுடன், அவர்களுக்கும் வாழ்த்துத் தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்வின்போது பயன் தரும் தென்னை மரம் ஒன்றும் இவ்வளாகத்தில் அரசாங்க அதிபரினால் நடப்பட்டது.
மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் மாவட்ட இணைப்பாளர் வீ. மைக்கல்கொலினின் வரவேற்புடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் பிரிவின் பதவிநிலை உதவியாளர் கே.எல்.றிழா, கணனி பயிற்சி செறியாளர் ஏ.ஆர்.எம்.பாசில், மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஏ.கருணாகரன், வை.சுகிர்தராஜா, வீ.திருவானந்தராசா, கே.திசன், யூ.சுரேஸ்குமார் மற்றும் பயிற்சியாளர்கள், பெற்றோர்கள் பலரும் கலந்து கொண்டனர்.