"உதிரம் கொடுத்து உயிரைக் காப்போம்" எனும் தொனிப் பொருளில் மட்டக்களப்பில் இன்றைய தினம் இரத்ததான முகாமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புன்னைச்சோலை இளைஞர் கழகம், கோப்றா விளையாட்டுக் கழகம் ஆகியவற்றின் உறுப்பினர்களாக இருந்து உயிர்நீத்த உறவுகளின் நினைவாக குறித்த இரத்ததான முகாம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும் இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு மட்டக்களப்பு போதனை வைத்தியசாலையின் இரத்த வங்கியினர் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய புன்னைச்சோலை இளைஞர் கழகம், கோப்றா விளையாட்டு கழகம் ஆகியன இணைந்து குறித்த இரத்ததான முகாமினை நடத்தியுள்ளனர்.
புன்னச்சோலை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற இரத்ததான முகாமில் அதிகளவிலான இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டு இரத்த கொடையினை வழங்கியதுடன், இரத்த வங்கிக்கு பொறுப்பான வைத்திய அதிகாரி உள்ளிட்ட உத்தியோகத்தர்களுக்கு இதன்போது நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.