மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலவட்டவான் பகுதியில் உள்ள மிகவும் வறிய நிலையில் உள்ள மாணவர்கள் பாடசாலைகளுக்கு செல்வதற்காக துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
ஏறாவூர்ப்பற்று பிரதேசத்தில் மயிலவட்டவான் மிகவும் பின்தங்கிய பகுதியாக காணப்படுவதுடன் பொதுப்போக்குவரத்தினைப்பெற்றுக்கொள்வதில் பாரிய சிரமத்தினையும் எதிர்கொண்டுவரும் பகுதியாகும். குறித்த பகுதியில் உள்ள மாணவர்கள் பாடசாலைகளுக்கு செல்வதில் போக்குவரத்துக்காரணமாக பெரும் கஸ்டங்களை எதிர்கொண்டுவருவதுடன் இதன் காரணமாக பாடசாலை இடைவிலகல்களும் அதிகரித்துவரும் நிலையில் இந்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
மயிலவட்டவான் பாடசாலையின் அதிபர் திவ்யதேவ் அவர்கள் பல்வேறு தரப்பினரிடமும் இது தொடர்பில் வேண்டுகோள் விடுத்த நிலையில் இமயம் அமைப்பின் ஊடாக இதற்கான உதவிகள் வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பிரித்தானிய வாழ் சில நல்லுள்ளங்களின் நிதியுதவியுடன் இமயம் அமைப்பின் ஏற்பாட்டிலும் ஒருங்கிணைப்பிலும் துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வு இன்று செங்கலடி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
செங்கலடி பிரதேச செயலாளர் தனபாலசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், பாடசாலை அதிபர் சாயி திவ்விய தேவு, இமயம் அமைப்பின் பொருளாளர் திருமதி கமலினி பிரசாத், மட்டக்களப்பு மாவட்ட தகவல் திணைக்கள அதிகாரி வ.ஜீவானந்தம், பிரதேச சிறுவர் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஹுஸைட், இமயம் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.சசிகுமார் மற்றும் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர எல்.வசந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது மிகவும் வறிய நிலையில் உள்ள 12 மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.