மட்டக்களப்பு மாவட்டத்தின் சுய தொழில் முயற்சியாளர்களின் வாழ்வின் மேம்பாட்டினை கருத்திற்கொண்டு செயற்பட்டுவரும் மட்டு சுய தொழில் முயற்சியாளர்கள் சம்மேளனத்தின் உப தலைவி திருமதி.கோகிலா ரஞ்சித்குமார் தேசிய ரீதியில் இடம் பெற்ற பெண்களின் திறமைகளை பெருமையுடன் வெளிப்படுத்தும் கண்காட்சியில் பங்கேற்று முதலிடத்தைப்பெற்று சாதனை படைத்துள்ளார்.
விவசாய திணைக்களத்தின் அனுசரனையுடன் கண்டி, கண்ணொருவ தாவர மரபணு மூல வளங்கள் நிலைய வளாகத்தில் பேராதணிய பெண்கள் விவசாய விரிவாக்கம் மற்றும் பயிற்சி மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சுயதொழில் முயற்சியாளர்களுக்கிடையிலான போட்டி மற்றும் கண்காட்சி நிகழ்வின் போதே தேசிய ரீதியில் முதலிடத்தினை மட்டு சுய தொழில் முயற்சியாளர்கள் சம்மேளனத்தின் உப தலைவி திருமதி.கோகிலா ரஞ்சித்குமார் பெற்றுக்கொண்டதுடன், நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த விவசாய மற்றும் கால் நடை வளங்கள் அமைச்சின் பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன அவர்களினால் நினைவுச் சின்னம் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சாதனையினை நிலைநாட்டியமைக்காக மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களம், மட்டு சுய தொழில் முயற்சியாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் உள்ளிட்ட சம்மேளனத்தின் உறுப்பினர்களும் இவரை வாழ்த்தி, பாராட்டுக்களை தெரிவித்துவருவதுடன், இவர் மட்டக்களப்பு வர்தக மற்றும் கைத்தொழில் சம்மேளத்தின் உயர்பீட உறுப்பினராகவும் சமூக செயற்பாட்டாளராகவும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.