படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 21 வது ஆண்டு நினைவேந்தல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்!!
படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 21 வது ஆண்டு நினைவேந்தல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் என்பன இன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது.
மட்டு ஊடக அமையம், கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியம், வடக்கு மற்றும் கிழக்கைச் சார்ந்த ஊடக அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த குறித்த நிகழ்வுகளில் படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர ஐயாத்துரை நடேசனின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டு, ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, இரண்டு நீமிட மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக அமைக்கப்பட்டுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவாக நிறுவப்பட்டுள்ள நினைவு தூபிக்கு முன்பாக படுகொலை செய்யப்பட்ட ஐயாத்துரை நடேசன் உள்ளிட்ட ஊடகவியலாளர்களின் படுகொலைகளுக்கு நீதி கோரி கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
இந்நிகழ்வுகளில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், அரசியல் பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் வடகிழக்கைச் சார்ந்த ஊடக அமைப்புக்களின் உறுப்பினர்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தனர்.