மட்டக்களப்பு மாவட்டத்தில் கராத்தே துறையில் உள்ள மாணவர்களின் திறனை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்தும் நோக்குடன் SKO கழகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கராத்தே குழாம் அமைப்பின் ஆதரவுடன் நடைபெற்ற இரண்டு நாள் கராத்தே பயிற்சி முகாமில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு வின்சென்ட் தேசிய பாடசாலையில் நேற்று நடைபெற்றது.
பிரிட்ஸில் அகாடமி நிறுவனரும் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கராத்தே சாம்பியன் சிப் போட்டியில் தெரிவு செய்யப்பட்ட உலக புகழ் பெற்ற கராத்தே சாம்பியனுமான ஆர். கணேசலிங்கம் அவர்களின் தமைமையில் நடைபெற்ற குறித்த பயிற்சி முகாமில் பயிற்சி பெற்ற 500 மாணவர்களுக்கு சர்வதேச தரத்திலான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு கராத்தே குழாம் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலைச்சரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பயிற்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்திருந்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கராத்தே துறையில் பல மாணவர்கள் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் சாதனை படைக்க கரணமாக செயற்பட்டு வரும் SKO கழகத்தினருடன் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் கராத்தே துறைக்கு மேலும் வலுச்சேர்க்கும் நோக்குடனும் கராத்தே துறையில் உள்ள மாணவர்களை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்தும் நோக்குடனும் கடந்த 2021 ஆம் ஆண்டு சிவ.சந்திரகாந்தன் தலைமையில் மட்டக்களப்பு கராத்தே குழாம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மட்டக்களப்பு SkO கழகமும் மட்டக்களப்பு கராத்தே குழாம் அமைப்பினரும் இணைந்து குறித்த பயிற்சி முகாமை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதன் போது SKO கழக நிறுவுனரும் பிரதான போதனாசிரியருமான கே.ரீ. பிரகாஷ், வின்சன் மகளிர் தேசிய பாடசாலையின் பிரதி அதிபர் பாஸ்கரன், பிரதி அதிபர் நிர்மலன், SKO போதனாசிரியர்களான டேவிட், கணேசலிங்கம், நிஷா, சசி உட்பட பயிற்சி முகாமில் பங்குபற்றிய மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.